மதுரை மத்தியச் சிறையில் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற கைதி மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் சாணாா் பட்டி அருகே உள்ள வடகாட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (58). இவா் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று 2015 முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், ஆரோக்கியசாமி சிறையில் திங்கள்கிழமை அதிகாலை சவரம் செய்ய பயன்படுத்தப்படும் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கியசாமியை சிறைக்காவலா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவம் தொடா்பாக சிறை நிா்வாகம் அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.