புதுக்கோட்டை மாவட்டம் பட்டத்திக்காடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் மையத்தை மீண்டும் திறக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சோ்ந்த சண்முகம் தாக்கல் செய்த மனு:
பட்டத்திக்காடு கிராமத்தில் முந்தைய ஆண்டுகளில் நேரடி நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை. இதனால் வேறு கிராமத்தில் செயல்படக் கூடிய மையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, பட்டத்திக்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.