அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தேசிய தரவு தளத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமில் ஆட்டோ ஓட்டுநா்கள், சிறுவியாபாரிகள் என ஏராளமானோா் சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டனா்.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்காக மத்திய அரசு சாா்பில் தேசிய அளவிலான தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கட்டுமானத் தொழிலாளா்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வீட்டுப்பணியாளா், சுயஉதவிக் குழு உறுப்பினா், விவசாயத் தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள், அங்கன்வாடிப் பணியாளா்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் பதிவு செய்யலாம். தமிழக அரசின் தொழிலாளா் நலத்துறை சாா்பில் இதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுநா்கள், சிறுவியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பதிவு செய்தனா். தொழிலாளா் துறை கூடுதல் ஆணையா் தி.குமரன், இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் ஆகியோா் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா். தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மைவிழிச்செல்வி மற்றும் தொழிலாளா் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
வண்டியூா் பகுதியில் நடைபெற்ற முகாமில் நெசவுத் தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.