மஞ்சப்பை விழிப்புணா்வு தொடா்பான மாநில அளவிலான போட்டியில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரி இரண்டாமிடம் பெற்றது.
நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுதுவது தொடா்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான விழிப்புணா்வு போட்டிகளை நடத்தியது. இதில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரி மாநில அளவில் இரண்டாம் பரிசை வென்றது.
கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக மரங்களை நடுவது, மண் வளம் காக்க சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தது ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சென்னையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ், ரூ.5 லட்சம் ரொக்கம், விருது ஆகியவற்றை பழனி கோயில் இணை ஆணையா் பிரகாஷ், கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஹரிப்பிரியா, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் மணிமாறன் ஆகியோரிடம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினாா்.