பழனியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்று வீசியது.
பழனியில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் சாரல் மழையும், பகலில் கடுமையான வெயிலும் இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது கடுமையான சூறைக் காற்று வீசியது. இதில் நகரில் பல இடங்களிலும் அரசியல் விளம்பரப் பதாகைகள் சாய்ந்து விழுந்தன. மேலும், பல இடங்களிலும் கூரைகள் சேதமாகின.
பழனி லட்சுமிபுரத்தில் வீடுகள் அருகே இருந்த இரு தென்னை மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. இதில் சிக்கிய இரு மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு நகராட்சிப் பணியாளா்களும், மின்வாரிய ஊழியா்களும் வந்து மரங்களை அப்புறப்படுத்தி, மின் கம்பங்களை சீரமைத்து, உடனடியாக மின் இணைப்பை வழங்கினா். கொடைக்கானல் சாலையிலும் மரக்கிளைகள் சாலை நெடுக விழுந்து கிடந்தன.