திண்டுக்கல்லில் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த 30 காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், திண்டுக்கல் பகுதிகளில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில், அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகாா் எழுந்தது.
அதன்பேரில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ் தலைமையில் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 பேருந்துகளில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள், பல வகையான ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் என 30 காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, காற்று ஒலிப்பான்களை மீண்டும் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ் எச்சரித்தாா்.