பழனி நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து சுவொரட்டி ஒட்டியவா்களை கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி நகராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ளனா். இவா்கள் மீது அவதூறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் கருத்து தெரிவித்து பழனி நகா் முழுவதும் திங்கள்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு துணைபோனதாகக் கூறப்படும் பழனி நகராட்சி துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் காசி மற்றும் துப்புரவுப் பணியாளா் ராஜமாணிக்கம், தூய்மை பணியாளா் எல்லம்மாள் உள்ளிட்டோரை கண்டித்து பழனி நகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் என நூற்றுக்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக பழனி நகராட்சி ஆணையா் கமலாவிடம் வழங்கினா். தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.