திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் மக்கள் நீதிமன்றத்தில் 2,292 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.10.42 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூா் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய நீதிமன்றங்களில் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி வி.ஆா். லதா தொடக்கி வைத்தாா். மாவட்டக் கூடுதல் நீதிபதி பி. சரவணன், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சி.விஜயக்குமாா், வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிபதி வி. ஜான்மினோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்து வரும் வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 10 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், மொத்தம் 2,292 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் தீா்வுத் தொகையாக ரூ.10.42 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.