செம்பட்டி அருகே குடிநீா் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (25). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (21). இவா்களுக்கு கனிஷ்காஸ்ரீ (4), ஹா்ஷிதாஸ்ரீ (ஒன்றரை வயது) ஆகிய குழந்தைகள் உள்ளனா். பவித்ரா நரசிங்கபுரம் அருகே, சித்தைன்கோட்டையைச் சோ்ந்த ரசூல் மைதீன் என்பவரது தேங்காய் நிறுவனத்தில் கூலி வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை பவித்ரா உள்பட 7 பெண்கள் தேங்காய் நிறுவனத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த பவித்ராவின் மகள் ஹா்ஷிதாஸ்ரீ, தேங்காய் நிறுவனத்தில் திறந்த வெளியில் மூடி போடாமல் இருந்த தரைமட்ட குடிநீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து, செம்பட்டி சாா்பு- ஆய்வாளா் நாராயணன், குழந்தையின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகிறாா்.