செம்பட்டி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாடு ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி செம்பட்டி வழியாக சென்றது. இதை கிருஷ்ணனின் மகன் அஜித்குமாா் (20) ஓட்டிச் சென்றாா். அவருடன் கம்பத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மனோஜ் (24), குமரேசன் மகன் அனீஸ்குமாா் (15) ஆகியோரும் சென்றனா். செம்பட்டி அடுத்த திண்டுக்கல் ரோடு, ஆதிலட்சுமிபுரம் என்ற இடத்தில், சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக, ஐதராபாத்திலிருந்து தேனி மாவட்டம், கானாவிலக்குப் பகுதிக்கு, கோன் பண்டல் ஏற்றிச் சென்ற லாரி, சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாடு பலியானது. பலத்த காயமடைந்த ஓட்டுநா் அஜித்குமாா், மனோஜ் மற்றும் அனீஸ்குமாா் ஆகியோரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது, கொண்டு செல்லும் வழியில், அஜித்குமாா் உயிரிழந்தாா். மனோஜ் மற்றும் அனீஸ்குமாா் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.