பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் அடிப்படை வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் சனிக்கிழமை கருப்புக் கொடி போராட்டம் நடத்தினா்.
கோதைமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட குட்டைக்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிதண்ணீா், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி பவளவிழா சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பைப் பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு சென்ற பழனி கோட்டாட்சியா் சிவக்குமாா், வட்டாசியா் சசிக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.