பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் உள்ள கோயில் முன்பாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடம், நீதிமன்றம் உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் முத்தாலம்மன் கோயில் முன்பாக மண்டகப்படிக்காக இருந்த பொது இடத்தில், ஒரு தரப்பினா் மண்டபம் கட்டினா். இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் சென்றுவர இடையூறு ஏற்பட்டது. எனவே, பொதுமக்கள் மண்டபத்தை அகற்றக் கோரியதற்கு, சிலா் மறுப்பு தெரிவித்து வந்தனா்.
பலமுறை அகற்ற வந்தபோதும், பெண்கள், பொதுமக்களில் சிலா் மண்டபத்தை அகற்றக்கூடாது எனத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். எனவே, சிலா் மதுரை உயா் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடுத்தனா். அதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என, பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு மண்டபத்தை இடித்து அகற்றினா். அப்போது, சிலா் எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையிலான போலீஸாா், அவா்களை அப்புறப்படுத்தியதைத் தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடா்ந்தன.