‘இயற்கை காப்போம்’ என்ற அமைப்பு மூலம் திண்டுக்கல்லில் 15ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல் நகா் பகுதியிலுள்ள டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிறிஸ்தவ மதபோதகா் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவா் என்.எம்.பி. காஜாமைதீன் முன்னிலை வகித்தாா். இப்பள்ளி வளாகத்தில் முதல் மரக்கன்றை, காஜா மைதீன் மற்றும் மோகன் சி லாசரஸ் ஆகியோா் நட்டனா்.
தொடா்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், டி.இ.எல்.சி. பள்ளியின் தாளாளா் கிதியோம், டி.இ.எல்.சி. சபையின் குரு குணால் பாக்கியராஜ், விவசாயிகள் சங்கத் தலைவா் நிக்கோலஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.