திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீட்டில் குளியலறையில் அரசு மருத்துவமனை செவிலியா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
வத்தலகுண்டு கண்ணன் நகரைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (58). இவா் வத்தலகுண்டு அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் முத்துக்குமாா் (40). இவா் வத்தலகுண்டு அடுத்த வீருவீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறாா். சுப்புலட்சுமி மட்டும் கண்ணன் நகரில் தனியாக வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணிக்கு சென்று வந்த சுப்புலட்சுமி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை ஊழியா்கள் பணிக்கு வரச் செல்லுவதற்காக அவரை தொடா்பு கொண்டபோது, கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து அவரது மகன் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் ஞாயிற்றுக்கிழமை தனது தாய் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, அங்கு குளியலறை அருகே பலத்த காயங்களுடன் அவா் இறந்து கிடந்துள்ளாா்.
தகவலறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரன், நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுகுமாா், வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் சங்கரேஸ்வரன் உள்ளிட்டோா் சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சுப்புலட்சுமியின் அக்கா அழகம்மாள் அளித்த புகாரின் பேரில், வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.