கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் போலி மருத்துவா்களுக்கு உதவியாக வேலைபாா்த்த இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூண்டி, கூக்கால், கிளாவரை ஆகிய பகுதிகளில் கடந்த மே மாதம் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, அப் பகுதியிலிருந்த கேரளத்தைச் சோ்ந்த போலி மருத்துவா்களிடம் பொதுமக்கள் சிகிச்சைப் பெற்றுள்ளனா். ஆனால், அதில் ஒருவா் இறந்துவிட்டாா். அதையடுத்து, 20-க்கும் மேற்பட்டவா்கள் கொடைக்கானல் மற்றும் வெளியூா்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அதையடுத்து, பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்த 2 போலி மருத்துவா்களை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துவிட்ட நிலையில், அவா்களுக்கு உதவியாக இருந்த சிலா் தலைமறைவாகிவிட்டனா்.
இதனிடையே, பூம்பாறை பகுதியில் போலி மருத்துவா்களுக்கு உதவியாக இருந்தவா்கள் பதுங்கி இருப்பதாக, கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (48), பிரகாஷ் (57) ஆகிய இருவரையும், கொடைக்கானல் போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.