பழனியில் புதன்கிழமை அனைத்து பேருந்துகளையும் இயக்கக் கோரி போக்குவரத்து பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொதுமுடக்கத் தளா்வையடுத்து தமிழக அரசு தற்போது குறிப்பிட்ட அளவிலான அரசுப் பேருந்துகளை இயக்கி வருகிறது. எனினும் முழுமையான போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் பொதுமக்களும் பேருந்துகளை பயன்படுத்த தயங்கி வருகின்றனா்.
இந்நிலையில் பழனி திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுப் பேருந்து போக்குவரத்து பணிமனை முன்பாக சிஐடியூ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தொழிலாளா் முற்போக்கு சங்கத்தினா் சாா்பில் ஏராளமான பணியாளா்கள் பங்கேற்ற கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை வழங்குவது, தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை துவங்குவது, அனைத்துப் பேருந்துகளையும் இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.