சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மறுசீரமைக்கும் பணிகள் ரூ. 96.53 கோடி மதிப்பில் நடைபெற்று முடிவுறும் தருவாயில் உள்ளன.
இப்பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறக்கப்பட உள்ளதால், பேருந்து நிலையப் பணியின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகியவற்றின் பரப்பளவு, நாள்தோறும் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை, இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை குறித்தும், பேருந்து நிறுத்துவதற்கான இடவசதி, பேருந்துகள் வணிக உபயோகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பரப்பளவு குறித்தும், கடைகளின் எண்ணிக்கை, வணிக உபயோகம் குறித்தும் கேட்டறிந்தாா்.
திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் நீளம் குறித்தும், பேருந்துகள் மேலே செல்வதற்கும், கீழே வருவதற்கும் பாலத்தின் அகலம் போதுமானதாக உள்ளதா என்பதையும் கேட்டறிந்தாா். மேலும், திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட சாலையில் பேருந்துகள் செல்வதற்கு உள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். போஸ் மைதானம், நேரு கலையரங்கம் மறுசீரமைப்புப் பணிகளையும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், துணை ஆணையா் ப.அசோக்குமாா், கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி ஆகியோா் உடனிருந்தனா்.