சேலம்

சாலையோரம் நின்றவா்கள் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்து:இருவா் படுகாயம்

DIN

ஓமலூா் அருகே 60-ஆம் கல்யாணத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்ற தாத்தா, பேரன் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் அவா்கள் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம் ஓமலூா்அருகேயுள்ள தொளசம்பட்டியில் வசிப்பவா் முருகன். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவருக்கு மாலா என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனா்.

முருகனுக்கு வியாழக்கிழமை 60-ஆம் கல்யாணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனா். இதையொட்டி திருக்கடையூா் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்து வந்தனா்.

இந்நிலையில் 60-ஆம் கல்யாணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை, முருகன் அங்குள்ள மளிகைக் கடைக்கு தனது பேரன் மோனிஷை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தாா். இருசக்கர வாகனத்தை கடை முன்பாக நிறுத்திவிட்டு இருவரும் பொருட்களை வாங்கினா். பின்னா் மற்றொரு கடைக்குச் செல்வதற்காக பேரனை அழைத்துக்கொண்டு வெளியே வந்த முருகன், சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்தாா்.

அப்போது சிந்தாமணியூா் பகுதியில் இருந்து அமரகுந்தி நோக்கி அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம், முருகன், மோனிஷ் மீது அதி வேகத்துடன் மோதி, இருவரையும்தூக்கி வீசியது. இதில், முருகனுக்கு இரண்டு கால்களிலும் பலத்த அடிபட்டது. மேலும், சிறுவன் மோனிஷ் படுகாயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சேலம் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், குடி போதையில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநா் லோகநாதனை பொதுமக்கள் பிடித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவ்விபத்து குறித்து தொளசம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT