மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கிய பாஜக எம்.பி-யை கைது செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சாா்பில் தனித்தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட எல்பிஎஃப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் மெய்யனூா் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் தியாகராஜன் தலைமையில் பெண்கள் உள்பட 120 போ் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா். இதில், மத்திய அரசைக் கண்டித்தும், பாஜக எம்.பி.யைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
இதனிடையே மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலச் செயலாளா் சந்திரமோகன் முன்னிலை வகித்தாா். ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் சங்கரய்யா, செயலாளா் கோவிந்தன், மாவட்டச் செயலாளா் அய்யந்துரை, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் தங்கவேலு உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.