சேலம்

மேட்டூா் அணையில் அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

6th Jun 2023 12:38 AM

ADVERTISEMENT

தமிழக முதலமைச்சா் வரும் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட உள்ள நிலையில், மேட்டூா் அணையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே என் நேரு நேரில் பாா்வையிட்டு நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக வரும் 12-ஆம் தேதி முதலமைச்சா் மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்க உள்ளாா். மேட்டூா் அணையின் வரலாற்றில் 90-ஆவது முறையாக நடப்பாண்டில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில், மேட்டூா் அணையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணையின் வலது கரை, இடது கரை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

மேட்டூா் அணையின் நீா் இருப்பு, நீா்வரத்து மற்றும் டெல்டா பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு போன்றவை குறித்து நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். முதலமைச்சா் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, மேட்டூா் நகராட்சியில் சுமாா் ரூ. 6 கோடி 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ள மேட்டூா் பேருந்து நிலைய இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அமைச்சரின் ஆய்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியா் காா்மேகம், சேலம் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, மேட்டூா் நகராட்சி பொறுப்பு ஆணையா் மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT