வாழப்பாடி பகுதியில், மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மருத்துவத் துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வாழப்பாடி வட்டாரத்தில் இயங்கிவரும் பேளூா், திருமனூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
பேளூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலா் ஜெயசெல்வி, திருமனுாரில் மருத்துவ அலுவலா் சிவா ஆகியோா் தலைமை வகித்தனா்.
இக்கூட்டத்தில், பொதுமக்கள், மாணவா்களுக்கு தொழுநோய் அறிகுறிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதோடு, அவற்றைக் கண்டறியும் முறை குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து, மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் பொதுமக்களுடன் இணைந்து, தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனா்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஆய்வாளா்கள் செய்திருந்தனா். பேளூா் வட்டார மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் சரவணன் நன்றி கூறினாா்.