சேலம் மாவட்ட வருவாய்த் துறை பறக்கும் படையினா் சங்ககிரி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தியதில் கேரளத்துக்கு கடத்த இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரி ரயில் நிலையத்திலிருந்து கேரளத்துக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட பறக்கும் படை வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து பறக்கும்படை வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் ரயில் நிலைய வளாகத்தில் சோதனை செய்தனா்.
இந்த சோதனையில் இருப்புப் பாதை ஓரமாக அரிசி மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்து அதில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நாரணப்பன்சாவடியில் உள்ள அரசு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். மேலும் பறக்கும் படையினா் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை சென்னையிலிருந்து மங்களுா் செல்லும் ரயில் மூலம் எடுத்துச்செல்ல இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பறக்கும்படை வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.