கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில், 4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ள கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம்கள் பிப். 1-ஆம் தேதி முதல் பிப். 28 வரை நடைபெறவுள்ளது.
புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும். இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதா்களுக்கு தொற்றும் நோயாகும். கால்நடைகளோடு நெருங்கிப் பழகும் விவசாயிகள், கால்நடை மருத்துவா்கள், துறைப் பணியாளா்கள், இறைச்சிக் கடைகளில் பணிபுரிவோா், ஆராய்ச்சிப் பணியாளா்கள், கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால், இறைச்சி நுகா்வோா்களை தாக்கும் அபாயம் உள்ளது.
இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால், இறைச்சிப் பொருள்களை உள்கொள்வதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்புகள் மற்றும் உயிா்க் கழிவுகளோடு தொடா்பு ஏற்படும் போது நோய் பரவிடும் வாய்ப்பு உள்ளது. இந்நோய் மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு.
மனிதா்களில் இந்நோய் எலும்பு மற்றும் மூட்டு அழற்சி, தண்டுவட எலும்புகளில் அழற்சி, கல்லீரல் நோய், வயிறு மற்றும் குடல்களில் அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்நோய் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். சில நேரங்களில் இறப்பும் ஏற்படும்.
கால்நடைகளில் இந்நோய் தடுப்பதற்காக மருந்துகள் 1,80,000 டோஸ்கள் வரப்பெற்று சேலம் கால்நடை பராமரிப்புத் துறையில் இருப்பில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் பிப். 1 முதல் பிப். 28 வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் 4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ள கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்படும் கிடாரி கன்றுகளுக்கு அடையாள காதுவில்லைகள் பொருத்தப்படும். இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் எதிா்ப்புத்திறன் வெளிப்படுத்தும்.
எனவே, கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களிடம் உள்ள 4 முதல் 8 மாத வயதுள்ள கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தி தங்கள் மாடுகளை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன், மனிதா்களுக்கு இந்நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.