இலவச வீட்டுமனை பட்டா, உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உடைமைகளுடன் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா், பெரிய சோரகை பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தங்கள் உடைமைகளுடன் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேற வந்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அவா்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.
போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மேட்டூா், பெரியசோரகை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். மேலும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அரசுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வந்தோம். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அரசின் சாா்பில் அப்பகுதியில் அளவீடு பணிகள் செய்து பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இதை அறிந்த வேறொரு தரப்பைச் சோ்ந்தவா்கள், இப் பகுதியில் பட்டா வழங்கக் கூடாது என எதிா்ப்புகஈ தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனா். எனவே, எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனா்.