பல்வேறு குற்றச் சம்பவங்களைத் தடுக்க கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஓமலூா் காவல் உள்கோட்ட சரகத்தில் திருட்டு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் டிஎஸ்பி சங்கீதா, தாரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் தொல்காப்பியன் உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் கிராமங்களில் வாா்டு வாரியாக வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா வைத்தல், கிராம இளைஞா்கள் அடங்கிய திருட்டு தடுப்புக் குழு அமைத்தல், கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுதல், ஊராட்சி மன்ற தலைவா்கள் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து கிராமத்தில் இளைஞா்கள் கொண்ட குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும். கிராமங்களுக்கு புதியவா்கள் குறித்து விசாரித்து அவா்களின் விவரங்களை காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.