மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கா் நிலங்கள் கால்வாய்ப் பாசனம் மூலம் பயன் பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15 வரை மொத்தம் 9.60 டிஎம்சி தண்ணீா் கால்வாய்ப் பாசனத்துக்காக திறந்துவிடப்படும்.
நிகழாண்டு அணையில் நீா் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூலை 16 ஆம் தேதி முதல் 137 நாள்களுக்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை வரை அணையிலிருந்து 6.5 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று நீா்வளத் துறை பரிந்துரையின் பேரில் தண்ணீா் திறப்பு காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.