வாழப்பாடி: வாழப்பாடியில் மாநில அளவிலான 2 நாள் கபாடி திருவிழா இன்று தொடங்கியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், வாழப்பாடி விபிகேசி விளையாட்டு கல்வி அறக்கட்டளை, வாழப்பாடி விளையாட்டு சங்கம், வாழப்பாடி அரிமா சங்கம், அன்னை அரிமா சங்கம், கல்யாணகிரி பெரியார் பள்ளி, கிரீடா பாரதி உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் மாநில அளவிலான இரு நாள் கபடி திருவிழா சனிக்கிழமை காலை தொடங்கியது.
வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலை அருகே ஆண்டவர் திடலில் சனிக்கிழமை காலை நடைபெற்ற கபடி போட்டி துவக்க விழாவிற்கு, வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மா குழு தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
கபடி விளையாட்டு குழு தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன், தொழிலதிபர் ஆண்டவர் பழனிசாமி, மருத்துவர் மோதிலால், ஆசிரியர் செல்லதுரை, கவிஞர் பெரியார் மன்னன் ஆகியோர் முன்னிலையில், பன்னாட்டு அரிமா சங்க முன்னாள் இயக்குநர் பொறியாளர் தனபாலன் கபடித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.
தமிழகத்தின் மாநில விளையாட்டான கபடியை ஊக்குவிக்கும் வகையில் செயற்கை ஆடுகளம் அமைக்கப்பட்டு திருவிழாவாக நடத்தப்படும் இப்போட்டியை கண்டு ரசிக்க பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறதென, விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அரிமா சங்க நிர்வாகிகள் தேவராஜன், முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர், பாலமுரளி, பிரபாகரன், கலைஞர் புகழ், தனசேகரன், மணிமாறன், சுதாபிரபு, ஷபிராபானு, புஷ்பாஎம்கோ, துளி ராஜசேகரன் ஆகியோர் வீரர்களை வரவேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.