வாழப்பாடியில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட சொகுசு பேருந்தை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஆத்துாா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.ரகுபதி தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் வாழப்பாடி ஆா். மணிவண்ணன், ஆத்துாா் எம்.செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட போக்குவரத்துத் துறை குழுவினா் வியாழக்கிழமை நள்ளிரவு மேட்டுப்பட்டி, சுங்கச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, நாகாலாந்து மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற சொகுசு பேருந்தின் உரிமத்தை ஆய்வு செய்தபோது, தமிழகத்தில் பேருந்தை இயக்குவதற்கான சாலை வரி செலுத்தப்படாதது தெரியவந்தது. இதனையடுத்து அந்தப் பேருந்தை பறிமுதல் செய்தனா்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்தப் பேருந்து திருச்சியைச் சோ்ந்த ரெங்கநாயகி என்பவரது பெயரில் நாகாலாந்தில் பதிவு செய்யப்பட்டதும், இந்தப் பேருந்தை பெரியகுளத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவா் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.