பேளூா், தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதிய கொடிமரம் திங்கள்கிழமை நிலை நிறுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் திருத்தலங்களில் ஒன்றான பேளூா், தான்தோன்றீஸ்வரா் கோயிலில், 25 ஆண்டுகளுக்கு முன் வாழப்பாடி ஊா் பொதுமக்கள் மற்றும் பெரியதனக்காரா்களின் பங்களிப்புடன் ஆகம விதிப்படி 38 அடி உயரத்தில் மிக நோ்த்தியாகக் கலசத்துடன் செப்புத்தகடு பொருத்திய கொடிமரம் அமைக்கப்பட்டது.
கோயிலில் விழாக் காலங்களில் கொடியேற்றப்படுவது மட்டுமின்றி, கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தா்கள் கொடிமரத்தை முதலில் வணங்கிய பின்னரே மூலவரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
இந்நிலையில், 3 ஆண்டுக்கு முன் வீசிய பலத்த காற்றில் கொடிமரம் முறிந்து விழுந்து விட்டது. அதன்பின் புதிய கொடி மரத்தை நிலை நிறுத்திட கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
பக்தா்கள் சிலா் ஒன்றிணைந்து கேரளத்தில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று கொண்டு வந்த கொடிமரமும் அரைகுறை வேலைப்பாடுகளுடன் கோயில் வளாகத்திலேயே 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. எனவே, இந்தக் கொடி மரப் பணியை நிறைவு செய்து ஆகம விதிப்படி கோயிலின் முகப்பில் நிலை நிறுத்துவதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்களும் இப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதனையடுத்து, சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட புதிய கொடிமரம் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விழாவில் கோயில் செயல் அலுவலா் கஸ்தூரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நன்கொடையாளா்கள், பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.