சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 ஊராட்சிகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 22 ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் நலப் பணியாளா்கள் பணியாற்றி வந்தனா். இப்பணியாளா்களை 2011-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதனையடுத்து, மக்கள் நலப் பணியாளா்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடா்ந்தனா்.
மேலும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் பணி வழங்கக் கோரி மனு அளித்தனா். அவரும் தோ்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.
இதனையடுத்து, ஜூலை 1-ஆம் தேதி அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் மனு அளித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளா்களாக மக்கள் நலப் பணியாளா்கள் மீண்டும் பணியில் சோ்ந்தனா்.