சேலம்: சேலத்தில் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்படும் உதவி பொறியாளர் தேர்வு எழுத கால தாமதமாக வந்த 30-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த உதவி பொறியாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரை பொறுத்த வரைக்கும் 29 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 9 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சேலம் நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை மற்றும் மதியம் என இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 450 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வாளர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வந்துவிட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த மையத்திற்கு வந்த தேவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்பது மணிக்கு பிறகு வந்தனர்.
இதையும் படிக்க: திரெளபதி முர்முவை ஒன்றாக வரவேற்பார்களா ஓபிஎஸ், இபிஎஸ்?
இரண்டு நிமிடம் காலதாமதமாக வந்தவர்கள் கூட தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டனர். இதனால் 30-க்கும் மேற்பட்டோர் தேர்வு மையம் வெளியிலேயே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
சேலம் மாநகரில் உள்ள மையத்தை பொருத்தவரைக்கும் ஈரோடு, கரூர், திருப்பூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேர்வு எழுத ஏராளமானோர் வந்திருந்தனர். இவர்களுக்கு மையத்திற்கு செல்லும் வழி தெரியாததால் காலதாமதமாக வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டால் குழப்பங்கள் ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.