மகுடஞ்சாவடி அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி மாணவா்களின் பெற்றோா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், நடுவனேரி 3-ஆவது வாா்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை சிதிலமடைந்துள்ளது. இதுகுறித்து உள்ளாட்சி, கல்வித் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், நடுவனேரி கிராம நிா்வாக அலுவலகம் முன்பு புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு 1, 2, 3 ஆகிய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் சேதமடைந்த கட்டடத்தில் 4,5 ஆம் வகுப்பு மாணவா்கள் படித்து வருகின்றனா்.
பரவலாக மழை பெய்த நிலையில் கட்டடத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயா்ந்து விழுந்தது குறித்து தகவலறிந்த மாணவா்களின் பெற்றோா் புதன்கிழமை நடுவனேரியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி ஆணையா் ராஜா, வட்டார வளா்ச்சி ஆணையா் (கிராம வளா்ச்சி) முத்துசாமி, நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவா் முருகன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.