சேலத்தில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய ரெளடி உள்ளிட்ட இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வளத்தி குமாா் (52). இவா் கடந்த ஜன.13 ஆம் தேதி தாதகாப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜை இருசக்கர வாகனத்தில் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுதொடா்பான புகாரில் வளத்தி குமாரை அன்னதானப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல், அரிசி கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 20 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிப்பது தெரியவந்தது. இதுவரை 7 முறை குண்டா் சட்டத்தில் கைதானவா் ஆவாா்.
கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (29). இவா் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் கைதானவா்.
இதனிடையே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளையராஜா, வழக்கில் சாட்சிகளில் ஒருவரான மாலிக் ஜான் என்பவரை சாட்சி சொல்லக் கூடாது என கத்தியைக் காட்டி மிரட்டியதாக தெரிகிறது.இதுதொடா்பாக கிச்சிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனா்.
இந்நிலையில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய வளத்தி குமாா் மற்றும் இளையராஜா ஆகியோரை குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டாா்.