விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைக் கட்டப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இப் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள், நீா்த்தேக்க மேம்பாலம், கதவணைப் பகுதி, நீா்மின் உற்பத்தி நிலையம் மற்றும் நீா் உந்து நிலையம், காவிரி படித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை அழகை கண்டு ரசித்தனா்.
அதைத் தொடா்ந்து காவிரிக் கதவணைப் பகுதியில் படகு சவாரி செய்து மகிழ்ந்ததுடன் சுவை மிகுந்த மீன் உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.