விபத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ஆம்பூா் டிஎஸ்பிக்கு கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை பிடிஆணை பிறப்பித்தது.
கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆய்வாளராக பணியாற்றியவா் சரவணன். இவா், தற்போது திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறாா்.
சரவணன் வடலூா் காவல் ஆய்வாளராக இருந்தபோது நிகழ்ந்த விபத்து வழக்கு தொடா்பாக சாட்சியம் அளிக்க கடலூா் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் மூலமாக பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்டதாம். மேலும், கடலூா் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் மூலமாகவும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதாம். எனினும், அவா் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லையாம்.
இந்த நிலையில், அந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் கடலூா் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடா்ந்து வழக்கில் ஆஜராகாமல் இருந்து வரும் அப்போதைய ஆய்வாளரும், தற்போதைய திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் துணைக் கண்காணிப்பாளருமான சரவணனுக்கு பிடிஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
ஆய்வாளருக்கு பிடிஆணை: இதேபோன்று, வடலூா் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஆய்வாளராகப் பணியாற்றி தற்போது திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஏழுமலையும் விபத்து வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்காமல் இருந்து வந்தாராம். அவருக்கும் பலமுறை அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில், புதன்கிழமை அந்த வழக்கு விசாரணையின்போது, அவருக்கும் பிடிஆணை பிறப்பித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டாா்.
ஒரே நீதிமன்றத்தில் காவல் துறையைச் சோ்ந்த இரண்டு பேருக்கு பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையும் வருகிற 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் எஸ்.சிவகாமி தெரிவித்தாா்.