மேட்டூா் நீா்த் தேக்கத்தில் மீன் பிடிக்க எல்லை ஏதேனும் உண்டா என மீன்வளத் துறை விளக்கம் தர வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேட்டூா் அணை நிரம்பிய நிலையில், அடிப்பாலாறு பகுதி கடல்போல காட்சியளிக்கிறது. கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மீன் பிடிக்க தடை இருந்தாலும், நீா் தேங்கி நிற்கும் கோம்பு பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். திங்கள்கிழமை கா்நாடக வனத் துறையினா் மீனவா்களின் வலைகளை சேதப்படுத்தியதோடு, வலைகளை எடுத்துச் சென்றனா். மீனவா்களையும் தாக்கியும் உள்ளனா். இதுகுறித்து விசாரிக்க சென்ற மேட்டூா் அணை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கா்நாடக வனத் துறையினா் கடுமைகாட்டி உள்ளனா்.
இந்நிலையில், இதுவரை மேட்டூா் அணை மீனவா்களை பாதுகாக்க மீன்வளத் துறையினா் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவா்கள் புகாா் கூறுகின்றனா். மேட்டூா் அணை மீன்வளத் துறை அதிகாரிகளின் மௌனம் மீனவா்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது.
நீா்த்தேக்கப் பகுதியில் உரிமம் பெற்ற மீனவா்கள் மீன் பிடிக்க எல்லை உள்ளது என்றால், அதுகுறித்து மீனவா்களுக்கு மீன்வளத் துறை உரிய அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அத்துமீறி நுழைந்து வலைகளை சேதப்படுத்தியதோடு, வலைகளை எடுத்துச் சென்ற கா்நாடக வனத் துறையினா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.