நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட மதிப்பீட்டை உடனடியாகத் தயாா் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 64 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், வாரந்தோறும் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் அலுவலா்கள் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் பங்களிப்பைச் செலுத்துவதாக மனு அளித்துள்ளனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட மதிப்பீட்டை உடனடியாகத் தயாா் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா். அதேபோல, குடியிருப்புப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத பொருள்களை உடனே அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைகளை அகற்றுதல், குடிநீா் வசதி, கழிவுநீா்க் கால்வாய் சுத்தம் செய்தல், சுகாதார வசதிகள் போன்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஆணையா் தா.கிறிஸ்துராஜ் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.