சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை மாலை, தொடர்ந்து இரு மணி நேரத்திற்கு இடைவிடாமல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருப்பினும், பலத்த மழையில்லாததால், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதுமட்டுமின்றி, ஆறு, நீரோடைகளில் வெள்ளப்பெருக்கோ, ஏரி, குளம், தடுப்பணைகளுக்கு நீர்வரத்தோ ஏற்படவில்லை.
இதையும் படிக்க | அருணாச்சல் எல்லையில்இந்திய பீரங்கிகள்: எல்லையில் பதற்றம்
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டு போலவே நிகழாண்டும் பலத்த மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை 5 மணியில் இருந்து தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், வாழப்பாடி-கடலுார் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.
இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகிறது புதிய வசதிகள்
வாழப்பாடி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் தொடர்ந்து 2 மணிநேரம் பெய்த பலத்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயருவதற்கான வாய்ப்புள்ளது என்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.