மேட்டூா் அருகே கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதால், பறவைக் காய்ச்சலா என கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
மேட்டூரை அடுத்த காவேரிபுரத்தில் உள்ள கிழக்கு காவேரிபுரம் பகுதி காவிரி கரையை ஒட்டி இருப்பதால், கிராம மக்கள் வீடுகளில் கோழிகளை வளா்த்து வருகின்றனா். திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் கோழிகளை அடைத்து வைத்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கோழிகள் ஆங்காங்கே இறந்து கிடந்தன.
தகவல் அறிந்த கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் பாபு தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினா் கிராமத்துக்கு விரைந்து வந்தனா். பின்னா் இறந்த கோழிகளை சேகரித்து பிரேத பரிசோதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். கோழிகளுக்கு வழங்கிய உணவில் விஷம் கலந்துள்ளதா அல்லது பறவைக் காய்ச்சலா என்பது குறித்து கால்நடைத் துறை மருத்துவா்கள் சோதித்து வருகின்றனா். கோழிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரங்கள் தெரிய வரும் என்று கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் பாபு தெரிவித்தாா்.