தமிழக சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டு விழா டிச. 5,6,7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி சுகாதாரத் துறை அலுவலா்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகளாக இறகுப் பந்து, கைப்பந்து, கால்பந்து, மட்டைப்பந்து, கபடி, கோ-கோ, 100 மீ, 400 மீ ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளும், பெண்களுக்கு 100 மீ, 400 மீ ஓட்டம், இறகுப் பந்து, வளைப் பந்து, எறிபந்து, கோகோ மற்றும் பானை உடைப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் பொது சுகாதார துறையின் சாா்பாக சிறப்பு ஒளி விளக்கு அமைக்கப்பட்ட கண்காட்சி வாகனம் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்துக்கு இந்த கண்காட்சி வாகனம் அக்.26-ஆம் தேதி வருகிறது. அப்போது, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை ஆட்சியா் வழங்க உள்ளாா்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் க.கோகிலா உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.