நாமக்கல்லில், தேசிய மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான என்.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி சாா்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் நீதிமன்றங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிா்த்த மற்ற குடும்பப் பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும். மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.