நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்செங்கோடு, குமரமங்கலத்தை அடுத்துள்ள கோயக்காட்டில் விசைத்தறிக்கூடம் நடத்தி வந்தவா் வெங்கடாசலம் (55). இவரது மனைவி நீலா என்கிற நீலாம்பாள் (50). இவா்களுக்கு பிரீத்தி (21), தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஷாலினி (16) ஆகிய இரு மகள்கள் உண்டு. இரு மாடிகள் கொண்ட சொந்த வீடு உள்ளது.
ஓராண்டுக்கு முன் பிரீத்திக்கு திருமணமாகி, கணவருடன் ராசிபுரத்தில் வசித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்கு மேல் வீட்டில் உள்ளவா்களை தொலைபேசியில் பிரீத்தி அழைத்தபோது யாரும் எடுக்காததால் அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவா் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது மூவரும் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. டிஎஸ்பி சீனிவாசன், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மூவரின் சடலங்களையும் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். வெங்கடாசலத்துக்கு கடன் பிரச்னை ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து திருச்செங்கோடு புகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.