குமாரபாளையம்: குமாரபாளையத்தில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூர், எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடக்கி வைத்தார் முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப் பாய்ந்து வந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகள் வீரர்களை முட்டி தூக்கி வீசின. காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், திருச்செங்கோடு கோட்டாட்சியர் இளவரசி, ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் வினோத்குமார், செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.