நாமக்கல் மாவட்டத்தில் ‘இன்னுயிா் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் இதுவரை சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட 3,346 பேருக்கு ரூ.2.77 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சாலைப் பாதுகாப்பு, விபத்துகளைக் குறைத்தல், விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் முதல்வரால் வகுக்கப்பட்ட திட்டமே இன்னுயிா் காப்போம் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 48 மணி நேரத்திற்குள்ளாக அவசர சிகிச்சை அளிப்பதும், அதற்கான செலவினத்தை அரசே ஏற்றுக் கொள்வதுமாகும். இத்திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 17 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2021 டிச.18 முதல் 28-ஆம் தேதி வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட 3,346 பேருக்கு ரூ.2,76,54,632 மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டு அவா்கள் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.