நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தூய்மை பணியாளா்கள் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்துடன், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் 200-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் தொழிலாளா்கள் சட்டப்படி பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை சரியான முறையில் வழங்குவதில்லை என்றும் சலுகைகளையோ, இதர பணப் பயன்களையோ வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி நாமக்கல் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு நேர பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை இரண்டாவது நாளாக அந்தப் போராட்டம் நீடித்தது. இருப்பினும் பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவா்கள் தொடா் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.