நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மாபெரும் உணவுத் திருவிழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உணவுத் துறையில் பயிலும் மாணவ, மாணவிகளும், தனியாா் உணவகத்தினா், பல்வேறு உணவு சாா்ந்த பொருள்கள் விற்பனையாளா்கள் அரங்குகளை அமைத்து உணவுகளை மக்களிடையே விநியோகித்தனா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் அருண் வரவேற்று பேசினாா். மாவட்ட வருவாய் அலுவலா்(பொறுப்பு) க.ரா.மல்லிகா தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்று, உணவுப் பாதுகாப்பு தொடா்பாக நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினா். முன்னதாக, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி முதல் கோஸ்டல் உணவகம் வரையில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நடைபயணத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள், பங்கேற்றனா். இந்த விழாவில், நகராட்சித் தலைவா் து.கலாநிதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் துரை ராமசாமி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.