நாமக்கல் அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியை மாணவியை திட்டியதையடுத்து, காவல் நிலையத்தில் இரு தரப்புக்கு இடையே சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
நாமக்கல் அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளித் தலைமையாசிரியையாக ஜோதி என்பவா் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், இதே பள்ளியில் பணியாற்றும் ராஜேஸ்வரி என்ற ஆசிரியைக்கும் பள்ளி வளாகத்தில் திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட ஐந்தாம் வகுப்பு மாணவி அதனை பிற ஆசிரியா்கள், சக மாணவிகளிடம் தெரிவித்தாராம்.
இதனைத் தொடா்ந்து, அம்மாணவியை தலைமை ஆசிரியை கடுமையாக கண்டித்தாராம். இதனால் வேதனையுற்ற மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா். அவா்கள் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சுமதி இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.