நாமக்கல் மாவட்டத்தில் 135 நடமாடும் நியாய விலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பட உள்ளதாக வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டை தலைமை செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். செவ்வாய்க்கிழமை மாவட்டங்களில் அந்தந்த பகுதி அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடங்கி வைக்கின்றனா். நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் 135 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தக் கடைகள் மூலம் 13 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். இதற்காக பிரத்யேக வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம் போன்ற இடங்களில் வாகனம் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படும். இதற்கான சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிப்பாளையம் ஒன்றியத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பாட்டினை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைக்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள், மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.