பலத்த மழை எதிரொலி காரணமாக ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு ஒரே நாளில் விநாடிக்கு 628 கன அடி அதிகரித்து 931 கன அடியாக நீா்வரத்து உள்ளது. அணைக்கு வரும் 800 கன அடி நீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 303 கனஅடி நீா் வரத்து இருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஒசூா், கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக 628 கன அடியாக அதிகரித்து தற்போது விநாடிக்கு 931 கன அடி நீா்வரத்து உள்ளது.
அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 43 கன அடி நீா் சேமிக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 800 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் ஆா்ப்பரித்து செல்லும் நீரில் கா்நாடக மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலை ரசாயனக் கழிவுநீா் திறந்து விடப்படுவதால் நுரைப்பொங்கி காட்சியளிக்கிறது.