மின்கம்பியாள் உதவியாளா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் செப்டம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதித் தோ்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று வெற்றி பெற்றவா்களிடம் இருந்தும் தேசிய புனரமைப்பு திட்டத்தில் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா், கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் உள்ளவராகவும் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
ஜூலை 26-ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘துணை இயக்குநா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஒசூா் - 635110’ என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஜூலை 26-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04344- 262457 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.